Sunday, November 15, 2009

மதியை அழிக்கும் மது!

மதியை அழிக்கும் மது!


மது அருந்துவது மூளையின் செயல்பாட்டைக் குறைத்து, திடீரெனத் தோன்றும் இடையூறுகளை உணர முடியாமல் செய்கிறது என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று (National Institutes on Alcohol Abuse and Alcoholism) வெளியிட்ட அறிக்கைதெரிவிக்கிறது. 'மது அருந்தியிருப்பவர்கள் வலுச் சண்டைகளில் அதிகம் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்' என்று, அந்த ஆய்வை நிகழ்த்திய திரு. ஜோடி கில்மன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

மிதமான குடிப்பழக்கம் உடைய 12 பேரிடம் இந்த ஆய்வு நிகழ்த்தப் பட்டது. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையிலும் தெளிவாக இருந்த நிலையிலும், பயமுறுத்தும் முகத்தோற்றங்கள் மற்றும் சாதாரண முகத்தோற்றங்களைக் கொண்ட நிழற்படங்கள் அவர்களுக்கு காண்பிக்கப் பட்டன. அப்போது அவர்களின் மூளைகளின் எதிர்வினைகளும் பதிவு செய்யப் பட்டன. அவர்கள் தெளிவாக இருந்த நிலையில் பயமுறுத்தும் முகத்தோற்றங்களை பார்த்த போது, மூளைகள் ஒருவித அச்சுறுத்தலை உணர்ந்தன. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையில் அதை உணரவில்லை.

மது அருந்தியிருக்கும் நிலையில் நமது மூளை அச்சுறுத்தல்களை உணர்ந்து அவற்றை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்தவியலாது என்பதையே இந்த ஆய்வு தெளிவு படுத்துகிறது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அமெரிக்கப் பெண்களிடையே மதுவருந்தும் பழக்கம் அதிகரித்திருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. 'போதைக்கு அடிமையாகும் பெண்கள் கடுமையான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேர்கிறது, மதுவருந்தும் ஆண்களை விட பெண்களுக்கே இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், பெண்கள் தங்கள் ஆயுளின் பெரும்பகுதியை இழந்து விடுகிறார்கள்' எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உடலிற்கும் உள்ளத்திற்கும் பெரும் கெடுதியை விளைவிக்கும் மதுவை குர்ஆன் தடை செய்கிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களும் மது அருந்துவதைப் பற்றிக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

"போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டதாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

திருமறையில் இறைவன் எச்சரிக்கின்றான், "(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது." (அல்குர்ஆன் 2: 219)

No comments:

Post a Comment